

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இரு அவைகளிலும் பாஜக எம்.பி.க்களின் வருகை குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் மையப் பகுதியில் பாஜக நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் வருகை குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கூடும்போதும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவ்வாறு நீங்கள் பங்கேற்றால்தான் என்னால் பல விஷயங்களை நிறைவேற்ற முடியும். ஆனால், உங்கள் சார்பாக என்னால் அவையில் பங்கேற்க முடியுமா?
நாடாளுமன்றம் கூடும்போது உங்களில் (பாஜக எம்.பி.க்கள்) யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அழைப்பேன். எனவே, நீங்கள் தவறாமல் இரு அவைகளிலும் பங்கேற்க வேண்டும். இது உங்களுடைய அடிப்படை கடமையாகும் என்றார் பிரதமர் மோடி.
மேலும், ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் அளவிலான கட்சியின் கூட்டுக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதையும் எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.