பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டப்பட்டது. அதன்படி தலா 7 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இவர்களில் 39 பேருக்கு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
இதில், முரளி மனோகர் ஜோஷி, சரத் பவார், மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா (மரணத்துக்குப் பிந்தைய விருது), இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமச்சந்திர ராவ் ஆகியோர் பத்ம விபூஷண் விருது பெற்றனர்.
யோகா குரு சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி, தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன், இந்தியாவில் லேப்ராஸ்கோபி சிகிச்சையின் தந்தையாக கருதப்படும் மருத்துவர் டெஹாம்டன் எராச் உத்வாடியா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாடகி அனுராதா பௌத்வால் உள்ளிட்ட 32 பேர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மீதமுள்ள 50 பேருக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்க இருக்கிறார்.