

"குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி பல குழந்தைகளில் இருந்து ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாது. தாங்கள் அளிக்கும் குழந்தையை பெற்றோர்களால் ஏற்கவோ, மறுக்கவோ மட்டுமே முடியும்' என்று தேசிய தத்தெடுப்பு வள ஆணையம் (சிஏஆர்ஏ) தெரிவித்துள்ளது.
தற்போது வரை "கேரிங்ஸ்' என்ற மத்திய அரசின் தத்தெடுப்பு தொடர்பான இணையதளத்தில் பதிவு செய்துள்ள பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பரிந்துரைக்கப்படுவதும் அவற்றில் இருந்து ஒன்றை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இந்த நடைமுறைக்குப் பதிலாக, தத்தெடுத்தல் தொடர்பான புதிய விதிமுறை திங்கள்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தேசிய தத்தெடுப்பு வளங்கள் ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபக் குமார் கூறியதாவது:
தற்போது தத்தெடுப்பு விகிதம் மிகவும் மந்தமாக உள்ளது. தத்தெடுப்புக்காக தாங்கள் பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலிக்கப்படும் காலம் குழந்தைகளுக்கு மிக அதிகமாக உள்ளது. எனவே, புதிய நடைமுறைப்படி எங்களிடம் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் உள்ள பெற்றோருக்குப் பரிந்துரைக்க முடியும்.
புதிய நடைமுறைப்படி பெற்றோர்களுக்கு தத்தெடுப்பு தொடர்பாக மூன்று கட்டங்களில் தலா ஒரு குழந்தையின் சுயவிவரக் குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். அந்தக் குழந்தைகளை அவர்கள் ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யலாம்.
மேலும், குழந்தைகளைத் தத்தெடுப்பதை கடையில் பொருள்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து வாங்குவது போன்ற வழக்கத்தை ஒழிக்கவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
தத்தெடுப்புக்கான புதிய நடைமுறைப்படி ஒரு குழந்தை பற்றிய விவரக் குறிப்பு அனுப்பப்பட்ட 48 மணிநேரத்துக்குள் பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொள்ள அல்லது மறுக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் ஒரு நீதிமன்றத்தில் தத்தெடுப்பு உத்தரவை நாடிப் பெறுவதற்கான நடைமுறைகளை முடிக்க 20 நாள்களாகும்.
தேசிய தத்தெடுப்பு வளங்கள் ஆணையத்தின் இணையதளத்தில் சுமார் 15,000 பெற்றோர்கள் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் இந்த இணையதளத் தொகுப்பில் 1,800 முதல் 2,000 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். தத்தெடுப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் மேற்கண்ட ஆணையம் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.