மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஎஸ்எஸ் இயக்கத்தின் துணை அமைப்பான 'சுதேசி ஜாக்ரண் மஞ்ச்' (எஸ்ஜேஎம்) அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கடிதத்தில் எஸ்ஜேஎம் குறிப்பிட்டுள்ளதாவது: தில்லி பல்கலைக்கழகத்தில் தீபக் பெந்தால் தலைமையிலான ஆய்வுக்குழு உருவாக்கியதாகக் கூறப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு, உண்மையில் உள்நாட்டுக் கண்டுபிடிப்பல்ல. ஏற்கெனவே இதற்கான காப்புரிமையை 'பேயர்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'புரோக்ரோ சீட்' நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த உண்மையை மறைத்து, அந்தக் கடுகு ரகம் இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்த உண்மையை ஆராயாமல், உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று அமைப்பான 'உயிரிப் பொறியியல் ஒப்புதல் குழு (ஜிஇஏசி)' அதற்கு அவசர அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு, மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்குமா என்பது குறித்த முறைப்படியான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.