வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக பெயரளவில் நடத்தப்படும் 'ஷெல்' நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 4.5 லட்சம் நிறுவனங்களின் இயக்குநர்களைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நிறுவனங்கள் விவகார இணையமைச்சர் பி.பி. செளத்ரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நேர்மையான முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது எனவும், 'ஷெல்' நிறுவனங்களால் நல்ல நிறுவனங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நீண்ட காலம் செயல்படாமல் இருப்பது உள்பட, நிறுவனச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது மட்டுமன்றி, அவர்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆய்வுக்குள்படுத்தபடும் எனவும் அவர் கூறினார்.
வரி ஏய்ப்பு முறைகேடுகளில் ஈடுபடும் வகையில், மிக நீண்ட காலமாக செயல்படாத நிலையிலும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாமலும் உள்ள 2,17,239 நிறுவனங்களின் பதிவுகளை நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 22-ஆம் தேதி ரத்து செய்தது.
இந்த நிலையில், மேலும் 4.5 லட்சம் நிறுவனங்களின் இயக்குநர்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பி.பி. செளத்ரி தெரிவித்தார்.
2013-ஆம் ஆண்டின் இந்திய நிறுவனங்கள் சட்டம், 164-ஆவது பிரிவின்படி, ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து, அவர் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குத் தாக்கல் செய்யாமல் இருந்தால், இயக்குநர் பதவியை வகிக்கும் தகுதியை அவரிடமிருந்து பறிக்க முடியும்.