தமிழகத்தின் பெரும்பாலான வங்கிகளில் இன்று முதல் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள 500 ரூபாய் நோட்டுகள், தமிழகத்தில் முதன்முதலாக சேலத்தில் உள்ள தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் நேற்று விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் ஒரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், மாநிலத்தின் அனைத்து வங்கிகளுக்கும் 500 ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், அவை இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பணத்தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.
இதேபோல், புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் பெரும்பாலான ஏடிஎம்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம் மூலமும் பெற முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.