பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 11
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் ரமேஷ் தலைமறைவானார்.
ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு ஆலை உரிமையாளர் ரமேஷை தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வானூர் அருகே ராவுத்தான்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (38). வானூர் அருகே புள்ளிச்சப்பள்ளம் பகுதி அருகே துருவை கிராமத்தில், நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.
ஞாயிற்றுக்கிழமை, ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3.30 மணி அளவில், பட்டாசில் வெடிமருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. 2 கான்கிரீட் கட்டட அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தொழிலாளர்கள் பல அடி தூரத்துக்கு வீசப்பட்டனர். பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி அலறினர்.
விபத்து குறித்து அறிந்த வானூர் தீயணைப்புத் துறையினர், ஆரோவில், வானூர் மற்றும் கோட்டகுப்பம் போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் தாமோதரன், கோட்டகுப்பம் டிஎஸ்பி ஞானவேல் உள்ளிட்டோரும் வந்து மீட்புப் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி விழுப்புரம் மாவட்டம், பொய்யப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோபால் (28), மரக்காணம் அருகே வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (32), விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேற்கு ஆனையூர் பகுதியைச் சேர்ந்த முத்து (38), பாலமுருகன் (30), அருண் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மரக்காணம் அருகே வண்டிபாளையத்தைச் சேர்ந்த சரவணன் (30), புதுச்சேரி அரியாங்குப்பம் மணவேலியைச் சேர்ந்த கண்ணகி (40), வசந்தா (40), பச்சைவாழி (50), சிவகாசியைச் சேர்ந்த கனகமுத்து (30), வேலு (33), ராமர் (38) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தோரின் சடலங்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி.ராஜேந்திரன், வானூர் எம்எல்ஏ சக்கரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் வந்து மீட்புப் பணியை பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், புதுச்சேரி எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர், விழுப்புரம் கோட்டாட்சியர் ஜீனத்பானு உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நிகழ்ந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com