நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாரதீய ஜனதா எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆய்வில் 15 எம்.பி.க்கள் (மக்களவை) மற்றும் 43 எம்.எல்.ஏ.க்கள் என பதவியில் உள்ள 58 பேர், வெறுப்பு பேச்சு வழக்குகளில் சிக்கியுள்ளதாக தெரியவந்து உள்ளது. சமூகத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் பா.ஜனதா முதலிடம் வகிக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது.
இதைத்தவிர அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளுக்கு தலா 6, தெலுங்குதேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த தலா 2 பேரும் இந்த வழக்குகளில் சிக்கியுள்ளனர். அமைச்சர்களைப் பொறுத்தவரை மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் மந்திரி உமாபாரதி மற்றும் 8 மாநில மந்திரிகள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். அமைப்பு கூறியுள்ளது.