சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வருகிற 24-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்தக் கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவானது கபிலா வாத்ஸ்யாயன், ஆர்.நாகசாமி மற்றும் சிதம்பரம் நகரைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வு கொண்ட குழு சார்பில் 1981-ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நாட்டியாஞ்சலி விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் 2014-ஆம் ஆண்டு வரை சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2015-ஆம் ஆண்டு முதல் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலகப் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சிகளை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொது தீட்சிதர்களே கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
நிகழாண்டு வருகிற 24-ஆம் தேதி மகா சிவராத்திரியன்று தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கி, 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாட்டியாஞ்சலி தினமும் மாலை 4.30 மணிக்கு தொடங்கி, இரவு 11 மணி வரை நடைபெறும். தொடக்க நாள் விழாவில் பத்மபூஷன் பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம் ஆடுகிறார்.
விழாவில், சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, துபை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். பிப்ரவரி 26-ஆம் தேதி நடிகை ஸ்வர்ணமால்யா நாட்டியமாடுகிறார்.