தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பிரமோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளித்து சிவபெருமான் வரவேற்கும் நிகழ்ச்சி இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா கடந்த 13-ம் தேதி திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது.
ஜூன் 14-ம் தேதி காலையில் சுவாமிக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதியுலா வருதலும், அன்றிரவு மின் அலங்காரத்துடன் அழகிய முத்து திருஓடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருஞானசம்பந்தர் திருமடாலயத்திலிருந்து திருமேற்றழிகை, கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அங்கிருந்து திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு முத்துப்பல்லக்கில் அடியார்கள் புடைசூழ வந்து தரிசித்தலும் நடைபெற்றது.
அங்கிருந்து தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப்பந்தலில் திருஞான சம்பந்தர் காட்சியளித்து, தேனுபுரீஸ்வரரை வழிபடல் காட்சியும், இன்றிரவு ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் முத்துவிமானத்தில் காட்சியளித்தல், சுவாமியுடன் திருஞானசம்பந்தர் முத்துப்பந்தலில் திருவீதி வலம் வருதலும் நடைபெற உள்ளது.