திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 5ஆம் நாளான திங்கள்கிழமை காலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
 யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
 அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
 விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com