கடல்ப் பயணம்: ஷஹீ ஸாதிக்

Updated on
1 min read

நீருக்குள் மூழ்கிய
வானத்து நெற்றிச்சுட்டி,
நீரலை மோதியே மிதந்திடும்
கன்னிப் பந்து.
ஏரிடும் நேரம் பார்த்து
எகிரிடும் மீனினம் வெல்ல!
இடாகினி ஓடும்
இருட்டிலே என் பயணம்.

தொலைவினைத் தொட்டிடும்
தொலையாத எண்ணம் கொண்டு,
தொடர்ந்திடச் செல்வது
தொலைத்திடும் வளாவிய  கடலிது.

கூவிளி இல்லா
கானல் ஓசைகள்,
குரல்களே மறந்திடும்
கடல்ப் பயண நாட்கள்...

செகிளெனக் குத்தும்
சுக்கானில் பல ஆணி,
வற்றாத கடல்ப் போல
முக்குளிக்கும் ஜீவனப் போர்!

முத்துக்குளிப்பில் முறிந்து செல்லும்
மூச்சுக் குழாய்களும்,
பவளப்பாறையில் படிந்தே தோற்ற
மூத்தவர் பந்தமும்,
நேற்றினை எண்ணியே
தோற்றிடாமல் கடல்ப் பயணம்...

சல்லியைத் தெப்பமாக்கி
செல்லுகின்ற பாதை மறித்து,
சல்லி வேர்கள் மூச்சு விட
செம்போக்குப் போன கம்பலை!
சென்று வரும் சேதி சொல்லா
செரித்துப் போன வாழ்க்கையுமுண்டு!
"செல்லாதே !"-என்று
சொல்லா செய்கையில் ,
சேலையில் கண்மறைக்கும்
செல்லாமை.
சேடி! சொல்லும்
சேதி கேட்க
சேட்பட்டவன் திரும்புவானோ?

வலையின் ஓட்டை
வயிற்றை வகித்தலாலோ,
விலையின் சாட்டை
வினயம் காட்டுதந்தோ!

கடலில் மிதந்து செல்லும்
உடலில்  மிரட்டும் தாபம்,
குடலில் நுரைத்துத் தள்ளும்
ஊமைத் துன்பங்கள் -என
தொடலாய்த் தொடர்கின்ற
எசம் இல்லா விதி நமக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com