தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொருளாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் எண்ணம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் எந்தவித எண்ணமும் அரசிடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2016, 7:53 am

DIN

தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் எந்தவித எண்ணமும் அரசிடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதித்துறைக்கு தேவையான தொகுப்பு நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி, உயர்நீதிமன்றத்தின் தன்னாட்சி அந்தஸ்தை பேணவும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாகவும், வழக்குரைஞர்கள் யானை ராஜேந்திரன், வசந்தகுமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோன்று, 2011-இல், சார்பு நீதிமன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளதால், அந்தத் தொகையுடன் சேர்த்து, ரு.9.41 கோடி நிதி ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
கடந்த 14 ஆண்டுகளாக இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
மாநில நீதித்துறை பயிலரங்களுக்கு, ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுப்பிய 100 கருத்துருகளில், 34 கருத்துருகளுக்கு ரூ.91.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி, தலைமை நீதிபதி உடனான மறு ஆய்வு கூட்டத்துக்கு பின், ரூ. 187 கோடி மதிப்பிலான 40 புதிய கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் கடந்த விசாரனையில், தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய இருக்கிறதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அது போன்று பிரகடனம் செய்யும் எந்த வித எண்ணமும் அரசுக்கு இல்லை.
ஆனால், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் வணிக வரித்துறையின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால், நிதி பெறுவதில் இடர்பாடு இருந்தது. இந்த நிலையிலும், நவம்பரில் மட்டும் நீதித் துறையின் 72 கருத்துருகளுக்கு ரூ. 278.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசின் மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்குவது குறைந்தாலும், நீதிதுறைக்கு தேவையான நிதியை குறைத்தோ அல்லது ஒதுக்கீடு செய்வதில் எந்தவித கட்டுபாடும் விதிப்பதில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதிகள், நீதித்துறையின் உள்கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்காக உள்ள நிலம் குறித்து ஆய்வு செய்ய அண்ணா பல்கலை. துணை வேந்தர் ஒரு நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி ஜனவரி 12-ஆம் தேதிக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒத்தி வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.