சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் தோட்டத்தில் நடிகர் அஜித் குமார் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். அன்று பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தார் நடிகர் அஜித்.
ஜெயலலிதாவின் மறைவு செய்தி கேள்விப்பட்டதும், அவர் சென்னைக்கு வர முடிவு செய்தார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியான விமான சேவை கிடைக்காததால், 7 -ஆம் தேதி 4.30 மணிக்கு சென்னை வந்தார். நேராக மெரினா கடற்கரைக்கு வந்தார் அஜித்குமார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் சோ மறைவு செய்தி கேள்விப்பட்ட அஜித். அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு சென்று சோவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது தோழி சசிகலாவை ஏரளமான அதிமுகவினர் தினமும் சந்திந்து அதிமுக பொதுச்செயலராக பதவியேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதவிர பல்வேறு அமைப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், போயஸ் கார்டன் வந்த நடிகர் அஜித்குமார், அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல்கள் வெளியாகி உள்ளது.