கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,850 கிடைக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு கரும்புப் பருவத்துக்கு நியாயமான-ஆதாய விலையாக டன்னுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால், கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன்னுக்கு ரூ.2,600-ம், மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான ஆலைகள் டன்னுக்கு ரூ.2,475-ம் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போன்றே, தமிழக அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்துச் செலவு ரூ.100 உள்பட ரூ.2,850 என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான ரூ.2,300 என்பதற்குப் பதிலாக தமிழக கரும்பு விவசாயிகள் டன்னுக்கு ரூ.2,850 அதாவது கூடுதலாக ரூ.550 பெற வழிவகை ஏற்படும்.
கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப் பாசன வசதிகளை கரும்பு விவசாயத்துக்கு அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
குழு அமைப்பு: கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க
விவசாயிகள்-சர்க்கரை ஆலை பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.