கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் ரயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை அடுத்த சீல்டா நகரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நோக்கி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. கான்பூர் அருகே இன்று அதிகாலை 5.20 மணியளவில் ரயில் வந்தபோது, ரயிலின் 13 ஸ்லீப்பர் வகுப்பு கொண்ட பெட்டிகளும், 2 பொது பெட்டிகள் என 15 பெட்டிகள் தடம்புரண்டன. அதிகாலை நேரமானதால், தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் தடம்புரண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் 43 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜ்மீர் ரயில் தடம்புரண்டதால் அந்த வழித்தடத்தில் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 21 ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக வடமத்திய ரயில்வே அதிகாரி அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 38 நாட்களில் நடந்த இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது.