
தமிழகம் மற்றும் கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விடை பெற்று, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியது.
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தமிழகத்தில் 13 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 120 மி.மீ. மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 110 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 100 மி.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 80 மி.மீ, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், கோவை மாவட்டம் பீளமேட்டில் 70 மி.மீ, திருப்பூர், அரியலூர் மாவட்டம் செந்துறை, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, காரைக்குடி ஆகிய இடங்களில் 60 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இவை தவிர திண்டுக்கல், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர், தேனி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மேற்கு தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகத்திலும், தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
இதுதவிர தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.