கர்ப்பிணிக்காக பின்னோக்கிச் சென்ற ரயில்!

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது, ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து,
கர்ப்பிணிக்காக பின்னோக்கிச் சென்ற ரயில்!
Updated on
1 min read

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது, ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏதுவாக 2 கி.மீ. தொலைவில் உள்ள குளிக்கரை ரயில் நிலையத்துக்கு பின்னோக்கி அந்த ரயில் எடுத்துச் செல்லப்பட்டது.
 திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயிலை காலை 8.20 மணியளவில் குளிக்கரையை அடுத்த சிராங்குடி பகுதி இருப்புப் பாதையில் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையிலான போராட்டக்குழுவினர் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
 இந்த ரயிலில் நாகை மாவட்டம், கீழ்வேளுர் வண்டலூரைச் சேர்ந்த சுதர்சனன் மனைவி ஜெயக்கொடி (22) பயணம் செய்தார். 9 மாத கர்ப்பிணியான இவர், வளைகாப்பு முடிந்து தஞ்சாவூரிலுள்ள தந்தை வீட்டுக்குச் செல்வதற்காக பயணம் செய்தார்.
 இந்நிலையில், அவருக்கு காலை 11 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரயில் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. இதையடுத்து, ரயில் பயணிகள் சிலர், ரயில் ஓட்டுநர் மற்றும் காப்பாளரை அணுகி கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் அளித்தனர். உடனடியாக ரயில் ஓட்டுநர் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அவர்களது அனுமதியின்பேரில், ரயில் கடந்து வந்த 2 கி.மீ. தொலைவில் உள்ள குளிக்கரை ரயில் நிலையத்துக்கு பின்னோக்கி எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டார். குளிக்கரை ரயில் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 குளிக்கரை ரயில் நிலையத்துக்கு இதுதொடர்பான தகவலை அளித்து ரயில் பின்னோக்கி செலுத்தப்பட்டு, ரயில் நிலையத்தை சென்றடைந்தது. தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கி குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 3 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
 ரயில்வே என்பது நெறிமுறைக்கு உள்பட்டே இருக்கும். இந்நிலையில் அவசரம் கருதி, கர்ப்பிணிப் பெண்ணுக்காக 2 கி.மீ. தொலைவுக்கு ரயிலை பின்னோக்கி இயக்குவதற்கு ரயில் ஓட்டுநர், பாதுகாப்பாளர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com