சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேரமாக நடந்த வருமானவரி சோதனை இன்று காலை 4 மணியளவில் நிறைவு பெற்றது. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே வருமானவரி சோதனை நடைபெற்றது என சோதனைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்.7) காலை, 6.00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை துவங்கி 22 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, இன்று சனிக்கிழமை அதிகாலை (ஏப்.8) 4 மணி அளவில் நிறைவு பெற்றது.
சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: எனது வீடு மற்றும் எனது சகோதரர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. எனது சொந்த ஊர் ளற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் எதுவும் சிக்கவில்லை. சரத்குமாரை தாம் சந்தித்ததைத் தொடர்ந்து என் வீட்டிலும், சரத்குமார் வீட்டிலும் நடந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடந்தே சோதனை இது என்று கூறினார்.
சோதனையில் குறிப்பிடும்படியான பணமோ, கைப்பற்றப்படவில்லை. எனது உதவியாளர் நைனார் என்பவர் வீட்டில் ரூ.2 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அறிந்தேன். அப்படியொரு பெயர் கொண்ட நபர் எனக்கு உதவியாளராக இல்லை. அவருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கூறினார்.