தமிழகத்தில் சனிக்கிழமை கரூர்பரமத்தியில் அதிகபட்சமாக 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி பிறகு 109 டிகிரி வெப்பம் பதிவானது இதுவே முதன்முறையாகும்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
அந்தமான் மற்றும் வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதுமேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புயலாக மாறினாலும் இதனால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அது வடகிழக்கு திசையில் மியான்மரை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும்.
ஞாயிற்றுக்கிழமையை (ஏப். 16) பொருத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
8 இடங்களில் சதம்: சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர்பரமத்தியில் 109 டிகிரி பதிவானது. மேலும் 4 இடங்களில் 106 டிகிரி பதிவாகியுள்ளது.
வெப்பம் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
கரூர் பரமத்தி 109
வேலூர், திருச்சி,
சேலம், மதுரை 106
தருமபுரி 105
பாளையங்கோட்டை 103
கோவை 100
சென்னை 96