புதுதில்லி: அதிமுக அம்மா அணியான சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக இடைத்தரகர் சதீஷ் சந்திரா என்பவர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து தினகரன் மீது தில்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. இதில் இரண்டு அணியும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்குச் சொந்தம் கொண்டாடி வந்தன.
இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இரண்டு அணிகளும் அந்த சின்னத்தையும் கட்சிப்பெயரையும் பயன்படுத்த தடைவிதித்தது. சசிகலா அணி அதிமுக அம்மா அணி எனவும், பன்னீர்செல்வம் அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி எனவும் இடைத் தேர்தலில் போட்டியிட்டன.
ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைப் பெற போட்டிப்போட்டு வந்தன. சமீபத்தில்தான் சசிகலா அணி தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய 8 வார அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.
இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்று (ஏப்ரல் 17) விசாரணை நடத்த உள்ளது.
இந்நிலையில், இரட்டை சின்னத்தைப் பெற்றுதருவதற்காக இடைத்தரகர் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திரா என்பவர் ரூ.50 லஞ்சம் பெற்றுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செயதனர். அவரிடமிருந்து ரூ.30 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சதீஷ் சந்திரா தங்கியிருந்த ஹாட்டல் அறையில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற்று தருவதற்காக ரூ.1.5 கோடி வாங்கியதாக சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுதருவதற்காக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீது தில்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தில்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.