இந்தியாவில் முதன்முறையாக யானைகளுக்கான விலங்குகள் ஆம்புலன்ஸ் அறிமுகம்

காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைக் காப்பாற்றி அதற்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்கும்,
சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்துக்கு வந்த யானைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் ஆம்புலன்ஸ்.
சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்துக்கு வந்த யானைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் ஆம்புலன்ஸ்.
Published on
Updated on
2 min read

காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைக் காப்பாற்றி அதற்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்கும், யானைகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்கும் மருத்துவ வசதி கொண்ட பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வறட்சியால் வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாயிப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் அண்மைக்காலமாக அப்பகுதியிலேயே முகாமிட்டு கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும், யானைகளை விரட்டும்போது மனித - விலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. சில சூழ்நிலைகளில் கும்கி யானைகளை வரவழைத்து கிராமத்துக்குள் முகாமிட்டுள்ள யானைகளை வனத் துறையினர் விரட்டுகின்றனர். அதுதவிர, சேற்றில் சிக்கித் தவிக்கும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவனம், தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள் ஆகியவற்றை மீட்க, சிகிச்சை அளிக்க உரிய வாகன வசதியில்லாததால் விலங்குகள் உயிரிழக்கின்றன.
இதுபோன்ற வன உயிரினங்களின் உயிரிழப்பைத் தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம், பதிவுஎண் பெறுவதற்கு சத்தியமங்கலம் வனச் சரக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
இதுகுறித்து, வனத் துறையினர் கூறியதாவது: ரூ. 20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் யானைக்காக இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் யானைகள், கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்கும் யானைகள் போன்றவற்றை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்துக்கு மாற்றும்போது வனத் துறையினர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்த ஆம்புலன்ஸில் யானைகளை ஏற்றுவது மிகவும் எளிது. ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கி வைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம். இதில், 10 டன் வரை உள்ள யானைகளை ஏற்ற முடியும். மேல்தளத்தில் பாதுகாப்பு வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், சில மருத்துவ வசதிகளும், அவசரகால வழியும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் கும்கி யானையை வைத்து கோவையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது, வாகனப் பதிவுக்காக சத்தியமங்கலம் வந்துள்ளது.
மேலும், இந்த ஆம்புலன்ஸில் இரவு நேரத்தில் யானைகளைப் பார்ப்பதற்கு தொலைதூர ஒளிவிளக்கு பொருத்துதல், மருத்துவ வசதிகள் கொண்ட யூனிட், யானைகள் நிற்கும் மேல்தளத்தில் யானைகளுக்கு சீரான தட்ப வெப்பநிலையை ஏற்படுத்த தண்ணீர்த் தொட்டி, வனஊழியர்கள் நிற்க பாதுகாப்பு வசதிகள், வாகனம் செல்லும்போது யானைகள் ஆடாமல் நிற்கத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் போன்ற வசதிகள் செய்ய வேண்டியுள்ளது.
யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இந்த ஆம்புலன்ஸை அடர்ந்த வனத்தில் நிறுத்தி வைத்து வனத் துறையினர் அதிலிருந்தபடியே விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். சில கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் வனத் துறையினரின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com