ஆதரவு வாபஸ் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றுள்ள நிலையில் அது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
ஆதரவு வாபஸ் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
Published on
Updated on
1 min read

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றுள்ள நிலையில் அது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் மும்பை பறந்து சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு மாநில ஆளுநரிடம் ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மனு அளிப்பதும், அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடுவதும் வாடிக்கையான ஒன்று தான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், ஓர் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக ஒரே ஒரு உறுப்பினர் மனு அளித்தாலும் கூட, அதனால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்றால், உடனடியாக பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும்.
மற்ற மனுக்களைப் போன்று இந்த மனுவையும் ஆளுநர் கிடப்பில் போட முடியாது. ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்களுக்கு உள்ள முதல் கடமையும், நடைமுறையில் உள்ள ஒற்றைக் கடமையும் தங்கள் நிர்வாகத்தில் உள்ள மாநிலத்தில் பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சியில் அமர்த்துவதும், பெரும்பான்மை இழந்து விட்டால் அந்த அரசை பதவி நீக்குவதும்தான். அதைக்கூட ஆளுநர் தட்டிக் கழிக்கக் கூடாது.
பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு, எந்தக் கொள்கை முடிவும் எடுக்க இயலாத காபந்து அரசாக வேண்டுமானால் நீடிக்கலாமே தவிர, அனைத்து அதிகாரங்களும் கொண்ட அரசாக நீடிக்க இயலாது. அவ்வாறு நீடிக்க அனுமதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயலாகும்.
இவையெல்லாம் இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பைக் கவனிக்கும் வித்யாசாகர் ராவுக்கு தெரியாத விஷயங்கள் இல்லை. இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர ஆளுநர் துணைபோகக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com