சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத குடிநீர், மின்சாரம், கழிவு நீர் இணைப்புகள் இருந்தால் அவற்றுக்கான அபராதத் தொகையை உயர்த்தும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவானது, சென்னை மாநகராட்சி சட்டத்தைத் திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மாநகராட்சி ஆணையாளரின் அனுமதியின்றி மாநகரகத்தில் மின்கம்பிகள், குழாய், வடிகால் அல்லது கால்வாய் ஆகிய எதனுடனும் இணைப்பு செய்ய மாநகராட்சி சட்டப் பிரிவு 191 ஆம் பிரிவு தடை செய்கிறது. மேலும், வளாகங்களின் உரிமையாளர்கள, குடியிருப்பாளர்கள் தெருக்களில் கழிவுநீர் விடப்படுவதைத் தடை செய்கிறது. இந்த சட்டவிதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு அபராதத் தொகைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோதச் செயல்களை நடப்பதைத் திறம்பட தடுக்கும் பொருட்டு, 191 மற்றும் 202 (5) ஆகிய சட்டப் பிரிவுகளில் உள்ள அபராதத் தொகைகளை அதிகப்படுத்துவதென முடிவு செய்துள்ளது. அதன்படி...
சாதாரண கட்டடம்: குடியிருப்பாக இருந்தால் ரூ.5 ஆயிரம், வணிக நோக்கத்துக்கான கட்டடம் எனில் ரூ.10 ஆயிரம்.
சிறப்புக் கட்டடம்: குடியிருப்பு எனில் ரூ.25 ஆயிரம், வணிக நோக்கக் கட்டடம் எனில் ரூ.50 ஆயிரம்.
பல அடுக்குமாடிக் கட்டடம்: பல அடுக்கு மாடி குடியிருப்பாக இருந்தால் ரூ.1 லட்சம், வணிக நோக்கக் கட்டடம் ரூ.2 லட்சம் என்ற வகையில் அபராதத் தொகைகள் உயர்த்தப்பட உள்ளன.