சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட, திரைப்படங்களுக்கு கடனுதவி அளிக்கும் நிதி நிறுவனர் முகுந்த்சந்த் போத்ரா அவரது மகன்கள் சந்தீப் போத்ரா, ககன் போத்ரா.
சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட, திரைப்படங்களுக்கு கடனுதவி அளிக்கும் நிதி நிறுவனர் முகுந்த்சந்த் போத்ரா அவரது மகன்கள் சந்தீப் போத்ரா, ககன் போத்ரா.

கந்து வட்டி கேட்டு மிரட்டல்: நிதி நிறுவன உரிமையாளர், 2 மகன்கள் கைது

சென்னையில் ஹோட்டல் உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
Published on

சென்னையில் ஹோட்டல் உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தியாகராயநகரில் ஹோட்டல் நடத்தி வருபவர் செந்தில் கே.கணபதி. தனது தொழில் தேவைக்காக தியாகராயநகர் விஜயராகவா சாலைப் பகுதியில் வசிக்கும் நிதி நிறுவன உரிமையாளர் ஸ்ரீ.முகுந்த் சந்த் போத்ரா (57) என்பவரிடம் ரூ.83.50 லட்சம் கடன் வாங்கினார்.
கடனுக்குரிய வட்டியை சரியாக கணபதி செலுத்தி வந்தாராம். இந்த நிலையில், அண்மையில் சில மாதங்களாக அவரால் சரியாக வட்டியைச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து போத்ரா, அசலும், வட்டியும் சேர்ந்து ரூ.4.24 கோடி தர வேண்டும் என கணபதியிடம் கேட்டாராம். இதைக் கேட்ட கணபதி அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், கணபதி அடமானமாக போத்ராவிடம் கொடுத்த சொத்துப் பத்திரத்தின் மூலம், அவரது சொத்தை போத்ரா விற்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டாராம்.
இதைக் தட்டிக் கேட்ட கணபதியை போத்ராவும், அவரது மகன்கள் சந்தீப் போத்ரா (25), ககன்போத்ரா (24) ஆகிய 3 பேரும் மிரட்டினராம். இதையடுத்து கணபதி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.கா.விசுவநாதனிடம் தன்னை போத்ரா கந்துவட்டி கேட்டு மிரட்டுவது குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விசுவநாதன், கந்துவட்டிப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கந்துவட்டிப் பிரிவு போலீஸார், முகுந்த் போத்ரா, அவரது மகன்கள் சந்தீப், ககன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஒரு வழக்கு: தியாகராயநகரைச் சேர்ந்த பிரபல திரைப்பட த் தயாரிப்பாளர் சதீஷ்குமார், ரூ.83 லட்சம் போத்ராவிடம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனுக்கும் கந்துவட்டி கேட்டு சதீஷ்குமாரை போத்ரா மிரட்டி வந்தாராம். இது தொடர்பாக சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீஸார், போத்ரா மீது மற்றொரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், அடுத்தக் கட்டமாக போத்ராவிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com