கோவை: கோவையை அடுத்த போத்தனூர் அருகே கணேசபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை புகுந்து தாக்கியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவைப் புதூர், கணேசபுரம், மைல்கல், மதுக்கரை, எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளில், தற்போது நிலவும் வறட்சி காரணமாக காட்டு யானைகள் ஊடுருவலும் அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காயத்ரி(12) யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில், வனப்பகுதிக்கு சென்ற பழனிச்சாமி என்பவரும், வெள்ளலூர் ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதிமணி, நாகரத்தினம் என்ற இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து யானை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மகளைக் காப்பாற்றச் சென்ற சிறுமியின் தந்தை விஜயகுமாரையும் யானை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து வெள்ளலூர் பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவைப் புதூர் தனியார் கல்லூரி அருகே புதன்கிழமை இரவு 9.40 மணி அளவில் ஒரு காட்டு யானை புகுந்தது. அங்கு சென்ற வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானை தாக்கி வேட்டைத் தடுப்புக் காவலர் கார்த்திக் (28) படுகாயமடைந்தார். அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.