
தமிழகத்தில் முதல் முறையாக மருத்துவமனைக்கான செயல் திட்டம், பேரிடர் மேலாண்மை பயிற்சியை சென்னை மியாட் மருத்துவமனை மற்றும் ஜிவிகே இஎம்ஆர்ஐ (அவரசகால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவை இணைந்து அண்மையில் நடத்தின.
முதல் முறையாக மருத்துவமனைக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கடந்த ஜூன் 25-இல் தொடங்கி, 27-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்றன.
இதில் இரண்டு நாள்கள் செயல் திட்ட விளக்கப் பயிற்சியும், 3-ஆவது நாளில் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் மேலாண்மை ஒத்திகையும் நடைபெற்றது. இதில் மியாட் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள், பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வெள்ளஅபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து மியாட் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சில பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான நோயாளிகளை வகைப்படுத்தி இடமாற்றம் செய்து பயிற்சி மேற்கொண்டனர்.
ஒத்திகையில் தீயணைப்புத்துறை வாகனமும் மீட்புப் படகும் வரவழைத்து, பேரிடர் காலத்தில் பயிற்சியாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.
அதையடுத்து அரசு அதிகாரிகளின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் ஏற்று பேரிடர் மேலாண்மை செயல் திட்டமும் வடிவமைக்கப்பட்டது.
காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், மின்சார வாரிய உதவிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.