இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுதோடு நின்று விடாமல், தமிழக அரசு போதிய அழுத்தம் தரவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம், வில்லாபுரம் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக பிரமுகர்கள் இல்ல விழாக்களில் பங்கேற்ற வைகோ, அப்போது கூறியதாவது:
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளனர். இப்பிரச்னையில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு அரசு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கவேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலி,ல் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், மத்திய அரசு செயல்படவில்லை. தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமை முடிந்தது என்று இருந்துவிடக் கூடாது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரும் நடவடிக்கையை தொடரவேண்டும்.
இலங்கையுடனான உறவுகள் மறுபரிசீலனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாலே, தமிழக மீனவர் தாக்குதலை இலங்கை அரசு கைவிடும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு மாநில அரசானது நிர்பந்தம் அளிக்க வேண்டியது அவசியம்.
அரசின் தவறான நடவடிக்கையை தமிழக இளைஞர்கள் தட்டிக் கேட்பது பாராட்டுக்குரியது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கும், மக்கள் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை. அவற்றை அனுமதிக்கக் கூடாது என்றார்.