காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது வரும் ஜூலை 11-ஆம் தேதிமுதல் தொடர்ந்து 15 வேலை நாள்களுக்கு விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பாக மூன்று மாநில அரசுகளும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சேகர் நாஃப்டே, ’காவிரி நீர் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கேரள அரசு கட்ட முயற்சித்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக காவிரி நீரை கேரள அரசு கூடுதலாகப் பயன்படுத்துகிறது. இதனால், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் பாசனத்துக்கு போதுமான நீர் கிடைக்காத நிலை ஏற்படும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்' என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கேரள அரசு வழக்குரைஞர், ’சிறிய அளவில் மட்டும்தான் தடுப்பணை கட்டப்படும். அது எந்த அளவுக்கும் தமிழகத்துக்குரிய நீர்ப் பங்கீட்டை பாதிக்காது. மேலும், காவிரி நீரைப் பயன்படுத்தி தடுப்பணையை கேரள அரசு கட்டவில்லை' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தடுப்பணை கட்டும் கேரளத்தின் முயற்சியைத் தடுக்க விரும்பவில்லை. அதே சமயம், அந்த பணிகளுக்கு காவிரி நீர் பயன்படுத்தப்படாது என்ற வாய்மொழி உறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அதில், தமிழகத்துக்கு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் ஒதுக்கப்பட்ட நீரின் அளவில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகியவை 2007-இல் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான இறுதி விசாரணை வரும் ஜூலை 11-ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும். தொடர்ந்து நீதிமன்றத்தின் 15 வேலை நாள்களில் அந்த விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9-இல் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட மனுவை வரும் ஜூலை மாதம் விசாரிக்க உச்ச நீதிமன்ற முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தை விசாரிக்கும் முன்பாக காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை மறுவிசாரணை நடைபெறும் ஜூலை 11-ஆம் தேதி வரை கர்நாடகம் செயல்படுத்த வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஜூலை 11-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புகளில் உள்ள அணைகள் அனைத்தும் வறண்டுள்ளன. கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.