

விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு இரண்டு நாள்களில் வெளியிடாவிட்டால், தடையை மீறி பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவது, உயிரை மாய்த்துக் கொள்வது என தங்கள் போராட்டம் தீவிரம் அடையும் என்று தில்லியில் தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கணணு தலைமையில் கடந்த 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் பிரச்னையை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி ஆகியோர் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மக்களவை அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஜேட்லியுடன் சந்திப்பு: அங்கு அருண் ஜேட்லியிடம் விவசாயிகளின் கோரிக்கைகளை அய்யாக்கண்ணு முழுமையாக விளக்கினார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கலந்து பேச வேண்டும் என்பதால் இரு நாள்கள் அவகாசம் தேவை என்று ஜேட்லி கூறினார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது: அறவழியில் எங்கள் போராட்டம் தொடரும். 10-ஆம் நாள் போராட்டத்துக்குப் பிறகு பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்றார் அய்யாக்கண்ணு.
இதற்கிடையே, ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 86 விவசாயிகளில் 15 பேர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.