மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்திக்கு, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளைப் பயிரிடுவதற்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால் மரபணு மாற்றப்பட்ட கடுகு வணிகப் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு வந்து விடும்.
இந்தியாவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைச் சமாளிப்பதற்காகவே கடுகு கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பயிரிடுவதற்காக அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் கூறப்படுகிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான எந்த சிறப்பு மரபணுவும் இல்லை. கலப்பின பயிர்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திறன் எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவு தான் மரபணு மாற்றப்பட்ட கடுகிலும் இருக்கும். இதனால் பெரிதாக எந்த விளைச்சல் புரட்சி நடைபெறாது. கடுகின் மரபணுவை மாற்றாமலேயே இந்திய வேளாண்மை விஞ்ஞானிகள் கடந்த 60 ஆண்டுகளில் 500 சதவீத அளவுக்கு கடுகு விளைச்சலை அதிகரித்துள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட கத்திரியை எதிர்த்த கட்சிகளில் பாஜகவும் ஒன்று. 2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வாக்குறுதியும் அளித்திருந்தது.
ஆனால், அதற்கு மாறாக அரிசி, சோளம், கம்பு உள்ளிட்ட 21 வகையான மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்ய அனுமதித்துள்ளது. இது பெரும் துரோகமாகும்.
எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியையும், மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அளித்துள்ள அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.