தமிழகத்தில் வாகன ஓட்டிகள் 6 விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் மட்டும் அசல் வாகன ஓட்டுநர் வாகன உரிமம் (செப்டம்பர் 6) புதன்கிழமை முதல் கேட்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
இது குறித்த விவரம்: சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்கும் வகையிலும் வாகன ஓட்டிகள் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
காவல்துறையினரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதைக் காட்ட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர், வாகன ஓட்டுநர் உரிமத்தின் நகலை வைத்திருக்கும் பழக்கம் இருப்பதோடு, அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை தங்களுடன் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க சாத்தியம் இல்லாத நிலை இருப்பதாகக் கருதினர்.
மேலும் ஒரு தரப்பினர், அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை தொலைத்துவிட்டு, நகல் உரிமத்தை வைத்தே பல ஆண்டுகளாக வாகனத்தை ஓட்டி வருவதால், அவர்களுக்கு புதுவிதமான நெருக்கடி ஏற்பட்டது.
அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்துக்கான தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் புதன்கிழமை (செப்.6) முதல் அசல் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விதிகளை மீறினால்...: இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
அனைத்து வாகன ஓட்டிகளிடமும், அசல் வாகன ஓட்டுநர் உரிமம் கேட்கப்பட மாட்டாது.
செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதி வேகமாக வாகன ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல், சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல் ஆகிய 6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைதான் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும்.
இந்தச் சோதனை மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குறைந்தது 3 மாதங்களாவது தாற்காலிக நீக்கம் செய்யப்படும் என்றார் அவர்.