காலமானார் திமுக முன்னாள் அமைச்சர் செ. மாதவன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான செ. மாதவன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சிங்கம்புணரியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சிங்கம்புணரி செல்லையாபிள்ளை மகன் செ.மாதவன். இவர் 1967-இல் அண்ணா அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், 1967 - 76 ஆம் ஆண்டுகளில் சட்டம், கூட்டுறவுத்துறை, தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மாதவன், 1982-ஆம் ஆண்டில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1989-இல் ஜானகி அணி சார்பாக பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியைத் தழுவினார். 1990-96-ஆம் ஆண்டுக்காலத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மீண்டும் 1996-ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது திமுகவின் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவால், வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்த மாதவன் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இவருக்கு சாந்தி, செல்வி என்ற இரு மகள்களும், அருளானந்தம் என்ற மகனும் உள்ளனர்.