தமிழகத்தில் புயல் மற்றும் கன மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் மற்றும் கன மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். அதிராம்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும், குறிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி ஒருவரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மரம் விழுந்ததில் எலிசபெத் ராணி என்பவரும் உயிரிழந்தார்.
திருவாரூரில் குடவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ராமகிருஷ்ணன் என்பவரும், கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி என்பவரும் உயிரிழந்தனர்.
இதுவரை கஜா புயல் மற்றும் கன மழைக்கு தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.