தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் ஜி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழ்த் துறையில் பல்வேறு நிலைகளை வகித்தவர் பாலசுப்பிரமணியம். அவர் பேராசிரியராக, முதல்வராக, துறைத் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது திராவிட பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தராக பதவி வகித்து வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆராய்ச்சிகளைச் செய்து அதனைப் பதிப்பித்துள்ளார். மேலும், நான்கு புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் வெளிப்புற தேர்வு ஆய்வாளராகவும், போலந்து நாட்டின் வர்ஸா பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியராகவும் செயல்பட்டுள்ளார்.
தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த ஊர்களான சித்தூர், கோலார் போன்ற மாவட்டங்களில் மொழிகளின் நிலைகள், தன்மைகள் ஆகியன குறித்து ஆய்வு செய்து அவற்றை ஆவணப்படுத்தியுள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.பாலசுப்பிரமணியம், பொறுப்பேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.