கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையே ஆதாரம். பருவமழை பெய்யாததால், இந்த அருவிக்கு நீர்வரத்து அடியோடு நின்றிருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்கிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு அண்மையில் நீர்வரத்து ஏற்பட்டது. புதன்கிழமை நீர் வரத்து மேலும் அதிகரித்து, கம்பித் தடுப்பைத் தாண்டி அருவி நீர் பாய்ந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், சீரான நீர்வரத்து ஏற்படும் வரை தாற்காலிகமாக அருவி மூடப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.