சுகவாழ்வு அளிக்கும் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்!

'திருக்கட்டளை' என்பது திருக்கற்றளியில் இருந்து மருவி வந்த சொல் ஆகும். கல்தளி என்றும் இதனைப் பிரிக்கவேண்டும் "தளி' என்றால் "கோயில்' என்று பொருள்.

'திருக்கட்டளை' என்பது திருக்கற்றளியில் இருந்து மருவி வந்த சொல் ஆகும். கல்தளி என்றும் இதனைப் பிரிக்கவேண்டும் "தளி' என்றால் "கோயில்' என்று பொருள். எனவே "கற்றளி' என்பது கற்கோயிலைக் குறிக்கிறது. செங்கல், சுண்ணாம்பு போன்றவை இல்லாமல் பாறைக்கற்களை மட்டுமே அடுக்கிக்கட்டப்பட்ட கோயிலைத்தான் கற்றளி என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு முழுவதுமே கற்களினாலேயே கட்டப்பட்டதால்தான் இவ்வாலயம், சுமார் ஆயிரத்து நூற்றம்பது ஆண்டுகளுக்கு மேலாக அழகு குறையாமல் இன்றும் மிளிர்கிறது.

இங்குள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மிகப் பழைமையான பரிவார வகைக் கோயிலாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் விஜயாலய சோழீச்சுவரம் கோயில், கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில் போன்றவையும் பரிவார வகைக்கோயில்களே! ஆனால் தற்போது இவை உள்நாட்டு, வெளிநாட்டு மன்னர்கள் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் திருக்கட்டளையில் உள்ள ஆலயம், கட்டப்பட்ட காலத்திலிருந்து அப்படியே கலையழகும், ஆன்மிக உயர்வும் குறையாமல் பரிவார வகைக்கோயில் அமைப்போடு விளங்குகிறது. இதனைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும். பரிவார வகைக்கோயில் என்றால் நடுவே சிவபெருமான் அமைந்திருக்க, சுற்றிலும் வெளிப்பிரகாரத்தில் மதில் சுவரோடு சூரியன், ஏழு கன்னிமார்கள், மூலவிநாயகர், முருகன், ஜேஷ்டாதேவி, சந்திரன், மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற கடவுளரின் ஆலயங்கள் தனித் தனியாகக் கட்டப்பட்டிருக்கும். அதுபோன்று இங்கும் அப்படியே அமைந்துள்ளன.

இக்கற்கோயில் அளவில் சிறியதாக இருந்தாலும் தஞ்சையில் சோழப்பேரரசன் ராஜராஜன் அமைத்த பெரிய கோயிலுக்கு இக்கோயிலும் ஒரு முக்கிய மாதிரியாக விளங்குவதாகச் சொல்லப்படுகிறது. சிவலிங்கம் உள்ள கருவறை மீது எடுப்பிக்கப்பட்டுள்ள ஐம்பது அடி கோபுரத்தின் (விமானம்) மேல் தட்டில் நான்கு திசைகளிலும் நான்கு நந்திகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தஞ்சைப்பெரிய கோயிலில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மீது கட்டப்பட்டிருக்கும் விமானத்தின் மேல் தட்டிலும் நந்தி திருஉருவங்களைக் காணலாம்.

இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலமாக, சிவபெருமான், கார்குறிச்சி கற்றலைப் பெருமானடிகள் என்றும் பின்னர் ஈஸ்வரமுடையார் ஆகி, தற்போது "ஸ்ரீ சுந்தரேஸ்வரர்' என்று வழங்கப் படுகிறார். அதனால் இப்பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு சுந்தரமகாளி, சுந்தரவிநாயகர் போன்ற திருநாமங்களுண்டு. மக்களும் சோமசுந்தரம், சுந்தரம், சுந்தரக்கண்ணு, சுந்தராம்பாள், சுந்தரி போன்ற பெயர்களை அதிக அளவில் வைத்துக்கொள்கின்றனர். இத்தலத்து இறைவனை வணங்குவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் நல்ல சுகம் பெறுவார்கள். திருமணம் முடித்தவர்கள் மங்கள நாயகியின் முன்நின்று வேண்டி குங்குமத்தை மாங்கல்யத்தில் அணிந்து கொண்டால் மாங்கல்யம் நிலைத்து அத்தம்பதியினர் நூறு ஆண்டுகள் சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

இக்கோயில் ஆதித்த சோழன் காலத்தில் (கி.பி. 870-907) ஆகிய ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மூலவர் கோயில் வடபுறச்சுவரில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. மூலவர் வீற்றிருக்கும் கருவறை சதுர வடிவில் அமைந்திருக்கின்றது. கருவறைக்கு முன் அர்த்த மண்டபமும், அதனையொட்டி முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) காலத்தில் கட்டப்பட்ட முகமண்டபமும் உள்ளன. கருவறைக்கு மேலேயுள்ள கோபுரம் சதுர வடிவில் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் மிலட்டுரில் நடந்த ஒரு போரில் கார்குறிச்சியைச் சேர்ந்த போகேந்திர சிங்கபேரரையன் என்பவரது மரணத்தைப் பற்றிக் கூறுகிறது. அவரது தம்பி அனுக்கன் என்பவரைப் பற்றியும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர்கள் தங்களுக்கிடையே பகைமை தீர வேண்டுமென்பதற்காகக் கோயிலில் விளக்கெரிக்கத் தேவைப்படும் நெய் எடுப்பதற்காக 25 ஆடுகளைத் தானமாக கொடுத்த செய்தியும் கல்வெட்டில் சொல்லப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி, வீராடனமூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூன்று மூர்த்திகளும் இங்கு அமைந்துள்ளனர். இதுபோன்ற மூன்று அவதாரங்கள் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்டாதேவி தன்னுடைய குழந்தைகளான மாந்தி, குளிகன் ஆகியோரை கையில் ஏந்தியபடி உள்ளார். இத்தேவிக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் அபிஷேகம் நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் நேரடியாக சூரியனின் ஒளி சிவலிங்கம் மீது படும்போது சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வழித்தடம்: புதுக்கோட்டையில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோ வசதிகள் உண்டு.
தொடர்புக்கு- 98650 50553.
- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com