பெரியவர் உகுத்த கண்ணீர்

1957-இல் நவராத்திரி விழாவின்போது சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் வந்திருந்தார்கள்.
பெரியவர் உகுத்த கண்ணீர்

(காஞ்சி மஹாஸ்வாமிகளின் 125 ஆவது ஜயந்தி மே 29, 2018)
1957-இல் நவராத்திரி விழாவின்போது சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் வந்திருந்தார்கள். அப்போது புத்திர சோகத்தால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்மணி பெரியவரைச் சந்தித்து அழுதார்கள். மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாய்க்குச் சந்தேகம். இல்லையென்றால் அவன் சாந்திக்குப் பெரியவர் அருள வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். "அந்த சாந்தி, இந்த ஹோமம் என்று பலரும் குழப்புகின்றனர். பெரியவர் வாயால நிஜமான பரிஹாரம் சொல்லணும். அவன் பேயாகத் திரியாமல் பெரியவா காப்பாத்தணும். " அழுகைக்கு இடையே அந்த அம்மையார் சொன்னார். 
ஒரு நிமிடம் கண்ணை மூடித் தியானித்தார் பெரியவர். "ஒன்றும் செய்ய வேண்டாம். கிராமத்துப் பண்ணையாட்கள் வேலை செய்யறாங்க இல்ல, வேலையின் போது அவங்க தொண்டைக்கு இதமா நீர் மோர் கொடுக்க ஏற்பாடு செய். தவிக்கிற குழந்தை சாந்தி ஆகிடுவான். புண்ணியமும் கிடைக்கும். நீயும் நிம்மதியா இருப்பே' என்றார். 
சாஸ்திரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பெரியவர் வாயிலிருந்து இது வந்தது ஆச்சரியம். சுற்றியிருந்த பக்தர்களுக்கு மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு காட்சியும் அங்கே அரங்கேறியது. பெரியவர் மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்தார்கள்.
"The tears of saints more sweet by far
Than all the songs of sinners are' 
-கவி ஹெர்ரிக்
பெரியவாளை நமஸ்கரித்த அந்த அம்மாள் எழுந்து பெரியவாளை ஏறிட்டுப் பார்த்து அச்சத்துடன் "அடடா, என் பாரம் போயிடுதுன்னு சந்தோஷப்பட்டேன். இப்ப பெரியவா மனசைக் கஷ்டப்படுத்திட்டேன் போல இருக்கு" என்று புலம்பினார்கள்.
"அதெல்லாம் இல்லை. பெரியவாளுக்கு மனசும் இல்லை. கஷ்டமும் இல்லை " பிரசாதத் தட்டை நகர்த்திச் சிரித்தபடியே சொன்னார் மஹா ஸ்வாமிகள்.
(நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம் -ரா. கணபதி)
- ஸ்ரீதர் சாமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com