நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், இன்னும் ஓர் ஆண்டில் அந்த நாட்டின் 80,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயல் இயக்குநர் ஆன்டனி லேக் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் வன்முறை காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் 26 லட்சம் பேர் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் 5 லட்சம் குழந்தைகளுக்கு போதிய உணவின்றி வாடும் நிலை உள்ளது.
இந்த நிலை நீடித்தால், இன்னும் ஓர் ஆண்டில் 80,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது.
உணவுப் பற்றாக்குறையால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நோய்வாய்ப்பட்ட ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
பதற்றம் நிறைந்த போர்னோ மாகாணத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
அந்தப் பகுதிகளில் சிக்கியுள்ள ஏராளமான குழந்தைகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளது என்றார் அவர்.