இந்தியப் பண்டிகைகளில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, முதல் முறையாக ஐ.நா. சபையில் கொண்டாடப்பட்டது.
தீபாவளியைக் கொண்டாடும் விதமாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகக் கட்டடத்தின் மீது தீப விளக்குடன் "ஹேப்பி தீபாவளி' என்ற ஆங்கில வார்த்தைகள் ஒளியாக விழுமாறு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒளியலங்காரம், வரும் 31-ஆம் தேதி வரை இருக்கும்.
ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன், இதை மகிழ்ச்சியுடன் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார். தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடங்கிய ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பீட்டர் தாம்சனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், அலங்கரிக்கப்பட்ட ஐ.நா. கட்டடம், அந்தக் கட்டடத்தை சிலர் புகைப்படம் எடுப்பது, அந்தக் கட்டடத்தின் பின்னணியில் சிலர் கைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற புகைப்படங்களை சையது அக்பருதீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, ஐ.நா. கட்டடத்தின் படங்களை, அதன் தலைவர் பீட்டர் தாம்சனும் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.