சிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு

சிரியாவில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 112-ஆக அதிகரித்தது என்று மனித உரிமைகள் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சிரியாவின் ரஷீதீன் பகுதியில் நிகழ்த்தப்பட்ட  தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த பேருந்துகள்.
சிரியாவின் ரஷீதீன் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த பேருந்துகள்.
Published on
Updated on
1 min read

சிரியாவில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 112-ஆக அதிகரித்தது என்று மனித உரிமைகள் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சிரியா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஃபுவா, காஃப்ரயா ஆகிய பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அரசு முயற்சி செய்து வருகிறது. நூற்றுக்கணக்கான பேருந்துகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அலெப்போ நோக்கி பேருந்துகளில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அலெப்போ நகர் அருகேயுள்ள ரஷீதீன் பகுதியில் பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வேகமாக ஓட்டி வந்து மோதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
தாக்குதல் நிகழ்ந்த இடத்திலேயே அப்பாவிப் பொதுமக்கள் 43 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.
அந்தத் தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக அதிகரித்தது என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற தாக்குதல்களை இதற்கு முன்னர் பல முறை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.
ஃபுவா மற்றும் காஃப்ரயா பகுதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனிடையே, சிரியா அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஈரான், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கத்தார் ஆகிய நாடுகளின் தலையீட்டில் பொதுமக்களை அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி வந்த நிலையில்தான் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, பொதுமக்களை ஏற்றிச் சென்ற பிற பேருந்துகள் வழியிலேயே பல மணி நேரம் நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com