மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிக்கான அனுமதியை வழங்க பாகிஸ்தான் மீண்டும் மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் நாச வேலைகளை நிகழ்த்துவதற்கான சதிச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கும், தமது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க வழக்குரைஞரை நியமிப்பதற்கும் குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியத் தூதரகத்தின் உதவி அவசியம். ஆனால், இதற்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
குல்பூஷணுக்கு தூதரக உதவி கிடைக்க அனுமதி அளிக்குமாறு இதுவரை 15 முறைக்கும் மேலாக பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரியுள்ளது. எனினும், இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி வழங்க அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா புதன்கிழமை மீண்டும் கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் தெஹ்மினா ஜாஞ்சுவாவை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி அளிக்க அனுமதிக்க முடியாது என்று தெஹ்மினா ஜாஞ்சுவா திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், குல்பூஷண் ஜாதவ் ஓர் உளவாளி என்பதால் அவருக்கு தூதரக உதவி வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் ஜாஞ்சுவா கூறியதாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்பூஷண் தாயாரின் மனு ஒப்படைப்பு: இதனிடையே, குல்பூஷணுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் அளித்துள்ள மனுவை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.