கனடாவின் எட்மாண்டன் நகரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் அங்கு திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டான். அந்நகரில் அமைந்துள்ள காமன்வெல்த் விளையாட்டு அரங்கத்தின் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள சதுக்கத்தில் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் கார் வந்தது. இதனால் அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் அதை தடுக்க முயன்றார்.
இந்நிலையில், அதே வேகத்தில் வந்த அந்த கார் போலீஸார் மீது மோதியதில் அவர் 15 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் அந்த போலீஸார் மீது கத்தியால் சரமாரியாகக் குத்தினான்.
பின்னர் அங்கு சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது அப்பகுதியில் இருந்த டிரக்கைக் கொண்டு மோதினான். இதனால் 5 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அந்த டிரக்கில் இருந்து இறங்கி தப்பி ஓடினான்.
இதில் பாதிக்கப்பட்ட போலீஸார் உட்பட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்த காரை சோதனை செய்த கனடா போலீஸார் அதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும், தாக்குதல் நடத்தியவன் சோமாலிய நாட்டைச் சேர்ந்த அகதி என்பதை உறுதி செய்தனர்.
இச்சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கூறியதாவது:
எட்மாண்டன் பகுதியில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும். கனடாவில் பயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் ஒழிப்போம். இதில் பாதிப்படைந்த மக்களுக்கு இந்த அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்றார்.