தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 2

பெருமானின் கருணைத்

News image
Updated On :24 ஆகஸ்ட் 2018, 6:06 am


பாடல் 2:

    ஈர வார்சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம் பெருமான்
    சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்
    வாரி மாமலர் உந்தி வருபுனல் நிவா மல்கு கரை மேல்
    ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

ஈர=குளிர்ந்த வார்சடை=நீண்ட சடை; சிதடர்=கீழ் மக்கள்; செல்வம்=சிறந்த குணங்கள்; சீர்= பெருமை; பெருமானின் கருணைத் தன்மையை, தானே வந்து அருளிய செயலைக், பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், கருணையின் அடையாளமாக பெருமானின் சடையினில் தங்கியுள்ள கங்கை நதியையும் பிறைச் சந்திரனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பகீரதன் பால் கொண்டுள்ள கருணை தானே, பெருமான் கங்கை நதியைத் தனது தங்குவதற்கு காரணமாக இருந்தது.   

பெருமானின் சீரும் சிறப்பும் அறியாமல் அவரை தொழாமல் இருக்கும் மனிதர்களை சிதடர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவது மணிவாசகரின் அச்சோப் பதிகத்தின் கடைப் பாடலை நமக்கு நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில், அத்தன் என்றும் கூத்தன் என்றும் ஐயன் என்றும் அண்ணல் என்றும் அந்தம் என்றும் ஆதி என்றும் இறைவனை குறிப்பிட்ட மணிவாசகர் இந்த பாடலில் அம்மை என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவனின் அருள் வடிவமாக அம்மை கருதப்படுவதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது. பெருமானின் கருணை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை நாய் சிவிகை ஏற்றுவித்த எனும் சொற்றொடர் உணர்த்துகின்றது. நாயின் இழிந்த தன்மை குறித்து எவரும் நாயினை உயர்ந்த இடத்தில் வைப்பதில்லை. அவ்வாறு உயர்ந்த இடத்தில் எவரேனும் வைத்தாலும் அந்த நாயின் பால் கருணை கொண்டு அளவற்ற பாசம் கொண்டிருந்தால் தான் அவ்வாறு செய்வார்கள். இந்த உலகியல் செய்கையின் அடிப்படையில், கீழ்மை குணங்கள் கொண்டிருந்த தன்னை (கீழ்மை குணங்கள் இந்த பதிகத்தின் முதல் எட்டு பாடல்களில் கூறப்பட்டுள்ளன) உயர்ந்த இடத்தில் வைத்த பெருமானின் எல்லையற்ற கருணைச் செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது. செம்மை என்று செந்நெறியை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். நன்னெறி செந்நெறி முன்னெறி என்று திருமுறைகள் குறிப்பிடுவது பெருமானை வழிபடும் நெறியினைத் தான். அத்தகைய நன்னெறியை அறியாத மனிதர்களை கீழ்மக்கள் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.        

    செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
    மும்மை நலம் அறுவித்து முதல் ஆய முதல்வன் தான்
    நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த
    அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

பொழிப்புரை:

கங்கை நதியினைத் தாங்கி இருப்பதால் எப்போதும் குளிர்ந்து காணப்படுவதும் நீண்டதும் ஆகிய சடையினை உடையவனும், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமானின் சிறப்புகளையும் உயர்ந்த குணங்களாகிய அவரது செல்வங்களையும் அறிந்து கொண்டு புகழ்ந்து தொழுது ஏத்தாத கீழ்மக்களை அவரது அருள் சென்று அடையாது. சிறந்த மலர்களை வாரிக்கொண்டு வருவதும் மிகுந்த நீர்ப்பெருக்கினை உடையதும் ஆகிய நிவா நதிக்கரையின் மீது அமைந்துள்ள சோலைகள் நிறைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், அவரது பெருமைகளையும் சிறந்த குணங்களையும் அறிந்து கொண்டு அவர் உறையும் திருக்கோயில்கள் சென்று அவரைப் பணிந்து தொழுவீர்களாக.,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.