சில தவிர்க்க முடியாத உடல் நலப் பிரச்சினைகளுக்காக கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை சஞ்சீதா விட்டுவிட வேண்டி வந்தது. வீட்டில் எப்படி சும்மா இருப்பது ? உணவு பற்றி இணையத்தில் பிளாக் உருவாக்கி எழுதத் தொடங்கினார். சஞ்சீதா சென்னையைச் சேர்ந்தவர்.
""எனது பயணம் புதிய திசை நோக்கி புதிய விஷயத்துடன் தொடங்கியது. 'சிறுஉணவு' (லைஃட் பைட்) என்ற பக்கத்தில் பலவகை உணவு பற்றி எழுத ஆரம்பித்தேன். புதிய உணவு செய்முறைகளுக்கு எனது பக்கத்தில் முக்கியத்துவம் அளித்தேன். உணவு வகைகளை அழகுபடுத்தல் என்ற பிரிவிலும் கவனத்தைச் செலுத்தினேன். எனது பதிவுகள் பிரபல "தயார் உணவு' நிறுவனங்களின் கவனத்தைக் கவர்ந்தன. அந்த நிறுவனங்களுக்காக நான் பணியாற்றியுள்ளேன். தனியார் சேனல்களின் சமையல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்தன. தொடக்கத்தில் பதட்டமாக இருந்தாலும், சமையல் செய்முறை அனுபவம் தைரியம் கொடுத்தது. சொந்தமாக தொழில் தொடங்க வழியையும்காட்டியது.
"ஓஜிஎம்ஓ' என்ற பெயரில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுவகைகளைத் தயாரித்து விற்க 2018-இலிருந்து ஆரம்பித்தேன். மக்கள் மறந்துவிட்ட தினைவகைகளை மீண்டும் மக்களுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்தேன். ஆரோக்கிய உணவு, சமையல் அறைக்குள் பிரவேசம் செய்யவும், இனி இயந்திரகதியில் இயங்கும் வாழ்க்கைதான் அனைவருக்கும் என்று ஆகிவிட்ட நிலையில், காலத்திற்கு ஏற்ற... சட்டென்று காலைச் சிற்றுண்டி தயாரிக்க உதவும் "ரெடி டூ ஈட்' காலை உணவு, மாலை வேளைகளில் கொறிக்க பலகார வகைகளை தினைகளில் செய்து விற்க ஆரம்பித்தேன்.
சத்துள்ள தினை வகைகளை உணவுப் பொருளாக ஆக்கும் போது பசையம் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். தினைவகைகளுடன் தேவைக்கு ஏற்ற மாதிரி, வேர்க்கடலை, மாப்பிள்ளை சம்பாவையும் சேர்க்க மறப்பதில்லை. நேரடி ஆன்லைன், ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலமாகவும் நான் உருவாக்கும் பொருள்களை விற்பனை செய்கிறேன். தினைகளில் தயாரிக்கப்படும் உணவுவகைகள் இருந்தாலும், நம்மவர்களை இட்லிதோசையிலிருந்து பிரிக்க முடியாது. அதனால் இட்லிதோசை மாவையும் தயாரித்து வழங்கி வருகிறேன்'' என்கிறார் 52 வயது தொழில்முனைவோரான சஞ்சிதா.