திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக பணத்தாள்கள் கண்காட்சியில் சுமார் 200 வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை ஒட்டன்சத்திரம் இந்தியன் வங்கி உதவி மேலாளர் நாராயணமூர்த்தி தொடங்கி வைத்துப் பேசினார். காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் வரவேற்றார். கண்காட்சியில் திருச்சியை சேர்ந்த நாணய சேகரிப்பாளர்கள் விஜயகுமார், பாண்டியன் ஆகியோர் சேகரித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என கண்டம் வாரியாக பிரிக்கப்பட்டு சுமார் 200 நாடுகளின் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை மாணவர்கள் பார்வையிட்டனர்.
இதில் காகித நோட்டுக்கள் மட்டுமன்றி பிளாஸ்டிக் நோட்டுக்கள், பல்வேறு வடிவிலான நாணயங்கள், இரும்பு, மரக்கட்டை, ஈயம், செம்பு, பித்தளை, தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்கள், அதிக இலக்கங்களை கொண்ட ரூபாய் நோட்டுகள் பார்வையாளர்களை கவர்ந்தன. அதே போல் கொடி, ஈபிள்டவர், இசைக்கருவிகள் வடிவிலான நாணயங்கள், பழங்கால மூங்கில், தோல்களால் ஆன நாணயங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் கூறியதாவது: உலகப்போரின் போது பண பரிமாற்றம் இல்லாத காலத்தில் போரிட்ட நாடுகள் இணைந்து ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளன. அதே போல் சோமாலியா உள்ளிட்ட நாடுகள் அழியும் விலங்குகளை காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் உருவம் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளன. மேலை நாடுகள் நாணயம், பணத்தாள் புழக்கத்தை கொண்டு வரும் முன்பே நம் நாட்டில் ராஜாக்கள், சமஸ்தானங்களை ஆட்சி செய்தவர்கள் நாணயங்களை புழக்கத்தில் வைத்திருந்த பெருமை நமக்கு உண்டு என்றார்.