மதுரையில் மே 5 இல் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் 25 ஆயிரம் பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குகிறார்.
ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள் விழா மதுரை சுற்றுச்சாலை பகுதியில் சிவகங்கை சாலை சந்திப்பு அருகே நடைபெறுகிறது.
இதில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் என காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகிக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்கள்-இளைஞர்களுடன் இணைந்து தமிழக முதல்வர் மதிய உணவருந்துகிறார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் செ.ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். விழாவுக்கான அழைப்பிதழை தமிழக முதல்வர் பழனிசாமியிடம் சென்னையில், தமிழக அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து மதுரை சுற்றுச்சாலை பகுதியில் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ஆணையர்கள் அருண் சக்திகுமார், ஏ.ஜி.பாபு ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.