மதுரையில் காதலர் தினத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு பூங்காக்களில் காதலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப் போவதாக ஆதித்தமிழர் பேரவை மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதற்கு எதிராக பூங்காக்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதனால் மதுரையில் எக்கோ பூங்கா, ராஜாஜி பூங்கா, கோயில்களில் போலீஸ் பாதுகாப்புப்
போடப்பட்டிருந்தது. பூங்காக்களுக்கு வந்த காதலர்களை போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ராஜாஜி பூங்கா பகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மதுரை மாவட்டக்குழு
சார்பில் கரும்புலி குயிலி பேரவை நிர்வாகி துர்கா தலைமையில் 9 பேர் இனிப்புகளுடன் வந்தனர். அவர்களை பூங்காவுக்குள் நுழைய போலீஸார் அனுமதி மறுத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க முயன்றனர்.
போலீஸார் தடுத்து நிறுத்தி மாநகர் மாவட்டச் செயலர் அழகுபாண்டி, கிழக்கு மாவட்டச் செயலர் அலெக்ஸ், மேற்கு மாவட்டச் செயலர் மதுரை வீரன் உள்பட 9 பேரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
இதையடுத்து ஆதித்தமிழர் பேரவையின் மாநகர் வடக்கு மாவட்டச்செயலர் அன்புச்செழியன், புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் ஆதவன் ஆகியோர் தலைமையில் அங்கு வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இனிப்புகள் வழங்க அனுமதி மறுத்ததால் போலீஸாருக்கும் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அமைப்பினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி பெண் உள்பட 13 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகே மண் குதிரைக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டத்தை இந்து இளைஞர் பேரவை அறிவித்திருந்தது.
இதையடுத்து மண்குதிரையுடன் வந்த இந்து இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.
அசோக்குமார், செயலர் மணிமுத்து, அமைப்பாளர் பார்த்தசாரதி உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.