திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, விவசாயத்தை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாள்களை 150 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வேலை செய்த அனைவருக்கும் ஊதியம் நிலுவையின்றி வழங்க வேண்டும். அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் இத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குடவாசல்: குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் மருதவாணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (100 நாள் வேலை) கீழ் நடைபெறும் பணிகளுக்கான ஊதியத்தை ரூ.203-ஆக உயர்த்த வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை 20 கிலோவிலிருந்து 30 கிலோவாக உயர்த்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.15,000 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கெரக்கொரியா, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் கொரடாச்சேரி, நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.