மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை தொடர்ந்து இயங்க கோரிக்கை

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை தொடர்ந்து இயங்கிட தமிழக அரசு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாரதீய மஸ்தூர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை தொடர்ந்து இயங்கிட தமிழக அரசு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாரதீய மஸ்தூர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, இச்சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.குமாரதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:   கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ்  இயங்கும் இந்திய அரிய மணல் ஆலை  என்ற பொதுத்துறை நிறுவனம் சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந்த ஆலைக்கு தேவையான மோனோசைட் கலந்த தாது மணல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களிலும் உள்ளது.  முந்தைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த தவறான கொள்கைகளின் காரணமாக தனியார் நிறுவனங்கள் கடலோர கிராமங்களில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக   இந்திய அரிய மணல் ஆலை நிறுவனம் முழு அளவில் செயல்படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
  இந்நிலையில் 2014   ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், பாரதீய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழியாக  இந்த நிறுவனம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக செயல்படுவதற்கு இருக்கும் தடைகளை நீக்கி ஆலை  சிறப்பாக செயல்பட  நடவடிக்கை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது.
 குமரி மாவட்ட மக்களின் நலன் கருதியும்     நிறுவன தொழிலாளர்களின் நலன் கருதியும்,  மத்திய அரசு இக்கோரிக்கையை ஏற்று 2016  ஆம்  ஆண்டில்  இயற்றப்பட்டது. இதன்படி, தனியார் நிறுவனங்கள் மேற்படி பகுதிகளில் மணல் எடுக்க   அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  மேலும்  இச்சட்டத்தின்படி,  கடற்கரையோர கிராமங்களில் ஆய்வு செய்து மோனோசைட் தாது மணல் இருக்கும் பகுதிகளை கண்டறியும் பொறுப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மண்ணியல் மற்றும் சுரங்க துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள இந்தத் துறையின் உதவி இயக்குநர் கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் ஆய்வு செய்து   விளவங்கோடு வட்டத்துக்குள்பட்ட 1177  ஹெக்டேர் (2907  ஏக்கர்)   நிலம் மோனோசைட் தாது மணல் இருக்கக்கூடிய பகுதியாக கடந்த 2017  ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.   இந்த ஆய்வு குறித்து அனைத்து ஆவணங்களும்  தமிழக அரசின் கனிம வளத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கை அணுசக்தி துறைக்கு அனுப்பப்படவில்லை, இதனால் அரிய மணல் ஆலை  நிறுவனம் கடற்கரையோர கிராமங்களில் மணல் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.  
    எனவே தமிழக அரசு உடனே நடவடிக்கை மேற்கொண்டு குமரி மாவட்ட ஆட்சியரால் கடந்த 2017  ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை அணுசக்தித் துறைக்கு அனுப்பி  அரிய மணல்  ஆலை   நிறுவனம் தொடர்ந்து செயல்பட  உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com